Tuesday, January 8, 2013

தால் மக்கானி


தேவையானவை:
கறுப்பு முழு உளுந்து- 250 கிராம்
பெ.வெங்காயம்-1,
தக்காளி-3,
இஞ்சி, பூண்டு விழுது -2 டீஸ்பூன்,
(இஞ்சி, பூண்டு வாசனை பிடிக்காதவர்கள் சேர்க்காமலும் செய்யலாம்.)
மிளகாய்த் தூள் -2 டீஸ்பூன்,
தனியாத் தூள் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
வெண்ணெய்/எண்ணை  –  2 டேபிள் ஸ்பூன்,
பட்டை – 1 துண்டு,
சீரகம் – அரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை.

செய்முறை:

உளுந்தை நன்கு கழுவி, சுமார் 7 மணி நேரம் ஊறவையுங்கள். முதல் நாள் இரவே ஊறவைத்தாலும் நலம்.
ஊறிய தண்ணீருடன் சேர்த்து, உளுந்தை குக்கரில் வைத்து, மூன்று விசில் வந்ததும் தீயைக் குறைத்து, 5 நிமிடம் வைத்து இறக்குங்கள். உளுந்து நன்கு குழைய வேக வேண்டும்.
வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
இப்போது, ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெயை உருக்கி, அதில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்குங்கள். இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள்.
இதனுடன் தக்காளி, தேவையான உப்பு சேர்த்து, தக்காளி கரையும் வரை வதக்குங்கள். தக்காளியை அரைத்தும் விடலாம்.
அவசரத்திற்கு தக்காளி பியூரி, தக்காளி சாஸ் கூட உபயோகப் படுத்தலாம்.
நன்கு வதங்கியதும், வேகவைத்த பருப்பை இதில் சேர்த்து, நன்கு கொதிக்கவிடுங்கள்.
ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெயை உருக்கி அல்லது எண்ணெய் விட்டு காய்ந்ததும்  அதில் பட்டை, சீரகம் தாளித்து, பருப்பில் சேருங்கள். நன்கு கொதிக்கவிட்டு இறக்குங்கள். மீதம் உள்ள வெண்ணெயை மேலாக தூவினாற்போல் வைத்துப் பரிமாறுங்கள்.
மேலும் ருசிக்கு, ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணும் ஆரோக்கியமான உணவு இது.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More