தேவையான பொருட்கள்
இட்லி அரிசி - 1 கிலோ
பொட்டுக்கடலை - 300 கிராம்
எள் - 25 கிராம்
வர மிளகாய் - 4
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 லிட்டர்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
1. இட்லி அரிசியை நன்கு கழுவி தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. பொட்டுக்கடலையை மிக்ஸியில் இட்டு (தண்ணீர் சேர்க்காமல்) நன்கு பொடி செய்து கொள்ளவும்.
3. வாணலியை அடுப்பில் வைத்து லேசாக சூடானதும் எள் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.
4. ஊறவைத்த இட்லி அரிசி, வர மிளகாய் ஆகியவற்றை கிரைண்டரில் போட்டு, அதிகம் தண்ணீர் சேர்க்காமல், முடிந்தவரை கெட்டியாக, மைய அரைத்துக் கொள்ளவும்.
5. அதனுடன் பொட்டுக்கடலை மாவு, வறுத்த எள், உப்பு, பெருங்காயம் ஆகிவற்றை சேர்க்கவும்.
6. 100 மில்லி எண்ணெயை ஒரு பாத்திரத்தில் தனியே கொதிக்க வைத்து இந்த மாவுக் கலவையுடன் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
7. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.
8. முறுக்கு நாழியில் மாவு ஒட்டாமல் வருவதற்காக எண்ணெய் தடவிக் கொள்ளவும். உங்களுக்கு பிடித்தவாறு 3 அல்லது 5 கண் அச்சை பயன்படுத்தவும்.
9. பாலிதீன் உறை அல்லது ஈரமான துணியின் மேல் சிறிய முறுக்காக பிழிந்து அதை எண்ணெயில் எடுத்து போடவும். அல்லது வடிகட்டி கரண்டியை திருப்பி அதன்மீது சின்ன வட்டமாக பிழிந்து, பின்னர் அதை அப்படியே திருப்பி எண்ணெயில் விழுமாறும் செய்யலாம்.
10. இரண்டு பக்கமும் திருப்பி விட்டு முறுக்கை பொன் நிறமாகப் பொரிக்கவும்.
11. முறுக்கில் உள்ள அதிகப்படியான எண்ணெயை வடிகட்டி மூலம் வடித்து, அகன்ற பாத்திரத்திலோ அல்லது தட்டிலோ போட்டு ஆறவைத்து, பின்னர் காற்று புகாத சுத்தமான பாத்திரத்தில் போட்டு வைத்துப் பயன்படுத்தவும்.
12. முதலில் பிசைந்த மாவு தீர்ந்ததும், அடுத்த பகுதி மாவை எடுத்து முன்னர் செய்தது போல் பிசைந்து முறுக்கு சுட்டெடுக்கவும்.
0 comments:
Post a Comment