Monday, December 31, 2012

கொத்துமல்லி குழம்பு



தேவையானவை :


பச்சை கொத்துமல்லித்தழை - 1 கட்டு
கறிவேப்பிலை - சிறிது
புளி - எலுமிச்சம்பழ அளவு
காய்ந்த மிளகாய் - 4 அல்லது 5
கொத்துமல்லி விதை (தனியா) - 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பூண்டுப்பற்கள் - 4 அல்லது 5
சாம்பார் வெங்காயம் - 10
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
நல்லெண்ணை - 3 அல்லது 4 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன் 

உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

 செய்முறை :
கொத்துமல்லித்தழையை நறுக்கி வைத்துக் கொள்ளவும். நறுக்கிய கொத்துமல்லி ஒரு நடுத்தர அளவு கிண்ணம் இருக்க வேண்டும்.

உப்பு, புளி இரண்டையும் ஊறவைத்து, ஒன்று அல்லது ஒன்றரை கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் மிளகாய், தனியா, மிளகு, சீரகம், வெந்தயம் அகியவற்றைப்போட்டு இலேசாக வறுக்கவும். பின்னர் அதில் பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன், அதில் தக்காளியை நறுக்கிப் போட்டு, அத்துடன் சிறிது உப்பும் சேர்த்து, தக்காளி நன்றாக மசியும் வரை வதக்கவும்.கடைசியில், கொத்துமல்லித்தழை, கறிவேப்பிலை இரண்டையும் போட்டு ஓரிரு வினாடிகள் வதக்கி கீழே இறக்கி ஆற விடவும். ஆறியபின், மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்.

அரைத்த விழுதை, புளித்தண்ணீரில் போட்டு, அத்துடன் மஞ்சள் தூளையும் போட்டு கலந்துக் கொள்ளவும்.

மீதி எண்ணையை ஒரு கடாயில் விட்டு, சூடானதும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன், அதில் சிறிது கறிவேப்பிலையைப் போடவும். அதில் கரைத்து வைத்துள்ள் புளித்தண்ணீரை விட்டு நன்றாகக் கலக்கி விடவும். குழம்பு மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது தண்ணீரைச் சேர்த்து, உப்பு சரிபார்த்து, மூடி, மிதமான தீயில் கொதிக்க விடவும். குழும்பு கொதிக்க ஆரம்பித்ததும், தீயை அடக்கி, சிறு தீயில் சற்று கெட்டியாகும் வரை வைத்திருந்து இறக்கி வைக்கவும்.

சூடான சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். மேலும், இது வயிற்றுத் தொல்லை, வாய் கசப்பு ஆகியவற்றையும் போக்க வல்லது.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More